உன்னைப்போல் ஒருவன்

இப்படியொரு படமெடுக்க கமலை எது தூண்டியிருக்குமென்று யோசிக்கிறேன்? விக்ரம் நடித்து வெற்றிவாகை சூடிய `அந்நியன்`? கமலுக்கு எப்போதும் தொழில்முறை சவால் பிடிக்கும். விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பது கூட கமலின் பாதிப்பு என்று சொல்லலாம். ஆக இருவரும் ஒரு ஆரோக்கியமான போட்டியில் உள்ளனர் என்று சொல்லலாமா?

அந்த நாள் படத்திற்குப் பிறகு பாட்டே இல்லாத ஒரு படம். ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். கமல், 'அந்நியன்' போல ஒரு படம் எடுக்கிறார் என்றால் அவரது முத்திரையைக் காட்ட வேண்டாமா? (ஆமாம், விக்ரம் பெயர் இராமானுஜம், கமலுக்கும் அதே பெயர்!). வித்தியாசமாக எடுத்திருக்கிறார். ஹாலிவுட் படத்தின் தரம் மெல்ல, மெல்ல தமிழ்திரைக்குள் வருவது வளர்ச்சி. அவர் காலத்திற்குள் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் நல்லது!



தமிழகம் அமெரிக்கமயமாகி வருவதை சமீபத்திய ஐடி வளர்ச்சி இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை இப்படம் மெய்ப்பிக்கிறது. `ரொம்பப் பழைய கம்யூட்டர் சார்! அபிவாதயே! சொல்லிட்டுத் தொடறேன்` எனும் வசனம்! அது சரி இப்போதெல்லாம் யார் அபிவாதயே சொல்லி சேவிக்கிறார்கள்?

ஓ! அது இரா.முருகன் வசனம் என்பதாலோ? சில இடங்களில் இரா.முருகனின் முத்திரையும் தெரிகிறது. காமன் மேன் என்பதற்கு தரும் விளக்கம்! அச்சாக முருக தரிசனம்!

இது லோ பட்ஜெட் படம்தான். ஆனால், நல்ல முறையில் எடுக்கப்பட்ட படம். ஆனால், தெனாலி போல் இரண்டு, மூன்றுமுறை பார்க்கத்தூண்டும் படமல்ல (ஓ! தெனாலி படச் சாயல் கூட இப்படத்தில் உண்டு).

தமிழ்மணம்! 5 ஆண்டு நிறைவு. காசியின் கேள்விகளுக்குப் பதில்

தமிழ்மணம் காசியை அறியாதோர் யார் உளர்? புதியோருக்கு ஒரு தொடுப்பு!

காசி "அண்ணா" என்று என்னை எழுத்தில் விளிக்கும் போதே நெஞ்சில் அன்பு ஊறும். நேரில் கேட்டால் எப்படி இருக்குமோ? நான் இன்னும் அவரைப் பார்த்ததில்லை. பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்புகள் இப்போது வலையில் பின்னிப்பினவெடுக்கின்றன ;-)

காசி நுட்பமான ஆசாமி. கோவைத்தமிழர்களுக்கே உரிய தொழில்நுட்பம்! அவர் ஆரம்பித்து வைத்த 'தமிழ்மணம்' இன்று 5 ஆண்டுச்சேவையை நிறைவு செய்கிறது! மகிழ்வான சேதி.

இதையொட்டி நட்சத்திர பதிவாளராக வலம் வரும், காசி ஆறுமுகம் என்னிடம் கேட்ட கேள்விகளை என் பதிவில் இடச்சொல்லியிருக்கிறார். அவரது ஆசைப்படி, அவரது கேள்விகளும், என் பதிலும்:


1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?


ஆங்கிலத்தை நோக்கும் போதோ இல்லை ஆசிய மொழிகளான கொரியன், ஜப்பானிஸ்,சீனத்தை நோக்கும் போதோ நாம் பின் தங்கியுள்ளோம் என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு அடிப்படை தமிழ் கல்வி இல்லாததால் தமிழில் உள்ளீடு செய்வோர் குறைவு. இணையத்தில் "தமிழர்களின்" பங்களிப்பு என்றால் ஆங்கிலத்தில் கணிசமான அளவு உண்டு.

இப்போது தமிழில் உள்ளீடு செய்யும் படித்த தமிழர்கள் தொழில்முறையில் வேறு ஏதோ தொழில் செய்து கொண்டு மாபெரும் முயற்சிகளை யெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல உதாரணம் நீங்களே. தமிழ்மணம் உருவாவதற்கு எத்தனை மணித்தியாலங்கள் தாங்கள் உழைத்திருப்பீர்கள்? அதன் பொருளாதார மதிப்பு எத்தனை லட்சம் பெறும்? ஆயின் சுயநலம் கருதாமல் செய்து இருக்கிறீர்கள். இது மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற இணைய முயற்சிகளுக்கும் பொருந்தும். இந்தப் பதில் கூட என் வேலை நேரத்தில் எழுதுவதே. இதை ஸ்பான்சர் செய்வது கொரிய அரசு என்று சொல்லலாம். தமிழ் இன்னும் இப்படியான ஒட்டுண்ணி வாழ்வில்தான் காலம் ஓட்டுகிறது!

முதலில் கணினித்துறை பற்றிய தெளிவை கல்லூரியில் எல்லாத்துறையினருக்கும் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் துறைக்கு. இது குறித்து நான் கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரியிலும், பேரூர் தமிழ் கல்லூரியிலும், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியிலும் எடுத்துரைத்திருக்கிறேன்.

விஷயமுள்ள தமிழர்கள் தமிழில் எழுதுதல் அவ்வளவு கேவலமில்லை என்று உணர வேண்டும். ஆங்கிலத்தில் எழுதத்தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே! தமிழ் பதிவுகளுக்கு நல்ல கவன ஈர்ப்பைத் தந்து இதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்மணம் இதைச் செய்திருக்கிறது.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).


வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் என்னால் இதற்கான முழுப்பதிலையும் சரியாக அளிக்க முடியுமா எனத்தெரியவில்லை.

மடலாடற்குழுக்களில் வரும் சேதிகளைப் பார்த்தால் மின் - இறையாண்மை என்பது தமிழகத்தில் செயல்படுவது போலுள்ளது. எவ்வளவு தூரமெனத்தெரியவில்லை.

மின்னரட்டை (சாட்) தமிழில் முழுவதும் பாவிக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸ் வசதியைத் தமிழர்கள் நன்கு பயன்படுத்துகின்றனர் என்றே கூறவேண்டும். இப்போது சென்னையில் இருந்து கொண்டு அமெரிக்க மாணவிகளுக்கு பாட்டு கிளாஸ் நடத்துவது உண்மை!


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?


தமிழ் முன்னிடுதல் என்பதில் ஜாதி அரசியல் அனாவசியமாக புகுந்துள்ளதைக் காணமுடிகிறது. உலகில் வேறெங்குமில்லாத பிரச்சனை இது. அடுத்து மொழியின் மீதான அதீதப்பற்று. இது 'இனவாதம்' எனும் அளவிற்கு நிற்பது ஆரோக்கியமானதில்லை. ஆங்கிலமொழியை விபசார மொழி என்று கூடச் சொல்வதுண்டு. ஆனால் அதன் வளத்தின் முன்னே நாம் கைகட்டி அல்லவோ நிற்கிறோம்? 'தூய்மைவாதம்' என்பது எப்படி நோக்கினும் இனவாதமே, நிறவாதமே! இதுவும் ஜாதீயம் என்று பார்த்து எப்போது நாம் முதிர்ச்சியடைகிறோமோ அப்போது நம் மொழி இடுகைகள் கூடும். இணையத்தில் மொழி வளம்பெறும்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


முதலில் தமிழ் மனம் எப்படி செயல்படுகிறதோ, அப்படியே 'உள்ளது உள்ளபடி' அதன் வடிவத்தை மின்னுலகிற்கு மாற்றுவேன். எவ்வகை இனவாதம், மொழிவாதம், நிறவாதம் போன்றவை தலையெடுக்காமல் தடுப்பேன். மொழி என்பது மனிதர் போல்தான். எவ்வளவு தடுத்தாலும் 'கலப்பு' என்பதை நம்மால் தவிர்க்கவியலாது. மொழியும் அவ்வாறே. மேலும் தமிழகம் உலகின் பெரிய கலைடாஸ்கோப்பாக உள்ளது. Melting pot ஆக உள்ளது. அதுவே அதன் வளம். அதை அப்படியே மின்னுலகிற்கு கொண்டு வருவேன். தமிழின் முதுசொம் (பழைய சொத்து, பிதுர்ராஜ்ஜியச் சொத்து) முழுவதும் 'உள்ளது உள்ளபடி' வலையேற்றம் காண வைப்பேன். தமிழன், மேலதிகாரிகளுக்கு ஜால்ரா அடித்தே தன் சுயமரியாதையை இழந்திருக்கிறான். ஆங்கிலேயர்களுக்கு குனிந்த முதுகு, சுதந்திரமாகியும் நிமிரவே இல்லை. அடிமைக் குணமில்லாத புதிய தமிழ்மணம் மின்னுலகில் வீசச்செய்வேன்!


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


வலைப்பதிவு எனும் தொழில்நுட்பம் பாரிய அளவில் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறது. தமிழின் ஆறாவது திணை இணையம் என்று இலக்கணம் சொல்லியுள்ளேன். அத்திணையின் புதிய இலக்கியம் இங்குதான் உருவாகிறது. சூழல் பாங்கான (environmental friendly) புதிய இலக்கியம் இனிமேல் மின்னிலக்கியமாகவே இருக்கும். அதன் வடிவம் தமிழ் முன்பு காணாத அளவில் இருக்கும். வலைப்பதிவு, ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பது போன்றது!

யோசனை?

1. முதலில் மனிதனை மனிதனாக, எழுத்தை எழுத்தாகக் காணுங்கள். ஜாதீயம் மின்னுலகில் நுழைய வேண்டாம். ஒரு தலித் தேசம் விட்டு தேசம் போனால் எவ்வளவு சுதந்திரம் பெருகிறானோ அது போல்தான் மெய்யுலகிலிருந்து மெய்நிகர் உலகிற்கு வரும் எழுத்தும் உணர்கிறது. ஆனால் மெய்யுலகில் காணும் எச்சங்களை இங்கும் கொண்டுவந்து கொட்ட வேண்டுமா? யோசியுங்கள்.

2. நேரமிருப்பின் நிறைய எழுதுங்கள்.'சித்திரமும் கைப்பழக்கம்' என்பது போல் மின்னுலகில் எழுதி இன்று இலக்கிய தாரகைகளாக ஜெயந்தி சங்கர். மீனா முத்து போன்றோர் ஜொலிக்கின்றனர். இதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது வலைப்பதிவே!

3. பல்வேறு துறைக்கென புதிய பதிவுகளை உருவாக்குங்கள்.

4. பின்னூட்டமில்லையென்று சோம்பி விடாதீர்கள். மின்பதிவான எழுத்து ஊசிப்போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்து அனுபவிக்க முடியும். என்றாவது ஒருநாள் ஆசைப்பட்ட கவன ஈர்ப்பு கிடைக்கும்!

5. மின் தாக்குதலைக் கண்டு கலங்கி விடாதீர்கள். அவை வெறும் மின்னணு என்று ஒதுக்கித்தள்ளுங்கள்.

6. நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டு எழுதுங்கள்.

7. சொல்லும் சொல் மந்திரச் சொல்லாக இருக்கட்டும். அது நிச்சயம் வாசிப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும்.

8. மேற்கோள் அதிகம் காட்டாமல் சுயமாக சிந்தித்து எழுதப் பழகுங்கள்.மேற்கோள் என்பது முதியோர் ஊன்றும் கைத்தடி போன்றது. மழலை கை கைவண்டி போன்றது. சுயமாக நடை பயிலுங்கள்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?


தமிழ்மணம் மின்தமிழ் வளர்ச்சியில் பெரும் கிரியாஊக்கி. அதுவே மின்னுலகின் நகர மையம். அங்கு வந்தால் எல்லோரையும் பார்க்கலாம். மிக நல்ல சேவை.

தொழில்நுட்பத்தை இன்னும் முடக்கி, எல்லா வலைப்பதிவு தளங்களிலும் தமிழ்மணம் பொறி செயல்படுமாறு செய்யுங்கள். தமிழ்மணம் நாலுவகை வலைப்பதிவாளர் நிருவனத்திற்கு மட்டும் செயல்படும் என்றால், ஒருவகையில் புளோக்கர், வேர்டுபிரஸ் இவைகளை மட்டும் ஆதரிப்பது எனும் நிலைக்கு தமிழனைத் தள்ளும்.

வலைப்பூ! என்று ஆரம்பித்த காலத்திலிருந்து உங்களுடன் பயணப்படும் எனக்கு இவ்வளர்ச்சி பேருவகை தருகிறது. வாழ்க வளமுடன்!

மின்னாக்கப்பணிக்கோர் நினைவுறுத்தல்

வருகின்ற 30ம் தேதி (ஞாயிறு) நேரமிருந்தால் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளலாமே!

இந்திரா பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
பெ.சு.மணி
கடலோடி நரசய்யா
யுகமாயினி சித்தன்
புதுவை சுகுமாரன்
கடலூர் வாசுதேவன்

போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொள்கின்றனர். அழைப்பிதழ் கீழே காண்க. 10வது நிறைவாண்டை நோக்கி நடைபோடும் த.ம.அயின் முதல் வெள்ளோட்டமிது. உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து நடத்தலாம்.



மின்தமிழ் குழுமத்திலும் இவ்விழா மெய்நிகராகக் கொண்டாடப்படவிருக்கிறது! கலந்து கொண்டு சிறப்பிக்க!