இலக்கியவாதியாக இருப்பதொரு அவஸ்தை :-) உலகின் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக் கவிதையாகின்ற அதே பொழுதில் உலகின் துன்பம், சமனற்ற தன்மை, பாசாங்குத்தனம், ஏழ்மை, கீழ்மை இவையெல்லாம் துன்புறுத்தும். தாங்கிக் கொள்வது கூட அவ்வளவு பிரச்சனையில்லை, ஆனால் அதை மாற்ற மனது துடிக்கும். இலக்கியத்தில் என்று புகுந்தேனே அன்றிலிருந்து இது அழியாத ஒரு அவஸ்தையாகத் தொடர்கிறது!
இலக்கியம் முதலில் இரசனையை வளர்க்கிறது. மானுட ஈடுபாட்டை அளிக்கிறது. தத்துவ தரிசனங்களை நோக்கி இட்டுச் செல்கிறது. இச்செயல்பாடுகளில் மனது ஈடுபடும் போது மெல்ல, மெல்ல ஒரு உளவியல் மாறுதல் நிகழ்வது காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இலக்கியம் மனிதர்களை மாற்றுகிறது. மனதை மாற்றுகிறது. செயற்பாட்டை மாற்றுகிறது. ஒரு தனிமனிதன் மாறும் போது சமூகத்தின் அழுக்குக் கிட்டங்கியில் ஒரு துளி குறைகிறது. கிட்டங்கி எப்போது சுத்தமாகும் என்பது பெரிய கேள்வியாக இருந்தாலும், நாம் அக்குப்பைக் கிட்டங்கியில் இல்லை என்பதே ஜீவிதத்தின் பெரிய ஆறுதல், இல்லையா?
20-21ம் நூற்றாண்டில் வாழ்வதில் நான் பேருவகை கொள்கிறேன். எத்தனையோ சமூக மாற்றங்களைக் கண்ட நூற்றாண்டுகள் இவை! அடிமை வியாபாரம் நிற்கிறது, காலனித்துவம் நிற்கிறது, தேசங்கள் விடுதலை அடைகின்றன, பெண் விடுதலை பேசப்படுகிறது, பாலியல் சுதந்திர விழிப்பு உருவாகிறது!
இந்த எல்லாவற்றிலும் சினிமாவின் பங்கு அளப்பரியதாக உள்ளது. பொழுதுபோக்கு என்பது முக்கியமாக இருந்தாலும், கல்யாண விருந்தில் ஊறுகாய்க்கும் இடமுண்டு என்பது போல் விழிப்புணர்வுச் சேதிகள் அவ்வப்போது கலந்து வருவதுண்டு. நேற்றிரவு Pretty Woman என்ற படம் பார்த்தேன். 1990-ல் வெளிவந்த ஹாலிவுட் படம். நானுமே இதை இப்போது இரண்டாவது முறை பார்க்கிறேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. கதை என்ன?
எட்வர்ட் லுயிஸ் எனும் பெரும் பணக்காரன் பொழுது போகாமல் தெரிவில் நிற்கும் விபசாரியை ரூமிற்கு அழைக்க, அங்கொரு மாற்றத்தின் கதை ஆரம்பமாகிறது. மிக, மிக அழகான இப்பெண் ஒரு வாரத்திற்கு 3000 டாலர் என்று விலை பேசப்படுகிறாள். அவளுக்கு இது மிகப்பெரிய தொகை. அவனுக்கோ இது பொறிகடலைக் காசு. அந்த வாரத்தில் அவனுடன், அவன் சந்திக்கும் பெரும் புள்ளிகளுடன், அவனது உயர் மட்ட சமூகத்துடன் பழகின்ற வாய்ப்பு இவளுக்கு நேர்கிறது. அது அவளுள் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவளுள் நீண்ட நாட்களாக அடங்கிக் கிடந்த 'ஒரு நல்ல வாழ்வை' நோக்கிய கனவை மீண்டும் உயிரூட்டுகிறது. அவள் அந்த வாரத்தை ஒரு குடும்பப்பெண் போலவே கழிக்கிறாள். அவனை நேசிக்கிறாள், பின் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒரு வாரம் முடிந்துவிடுகிறது. தனது சாதாரண வாழ்விற்குத் திரும்புகிறாள். எப்போதும் அவள் காணும் கனவு, தன்னை ஒரு அரசிளங்குமரன் வந்து காப்பாற்றுவான் என்பது. அது இறுதியில் நடந்துவிடுகிறது.
ஏனெனில், நண்பர்களற்ற தனி மனிதனான் எட்வர்ட் விவியன் எனும் இவ்வழகியின் பழக்கத்தால் மாற்றமுறுகிறான். மனித நேயம் தலை தட்டுகிறது. உள்ளார்ந்த அன்பு மேலெழும்புகிறது.
இதை எடுத்திருக்கும் விதம் அருமை. அமெரிக்காவில், வெள்ளைக் கலாச்சாரத்தில் விபச்சாரத்தனம் கண்டிக்கப்பட்டாலும், அவர்களையும் மனிதர்களாகப் பார்த்து, அவர்களும் மேம்பட்டு உயர் வாழ்வு வாழ முடியும் என்ற கருத்துக்களை மறுதலிப்பதில்லை. ஆனால் தமிழக சூழலில், அதுவும் கே.பாலச்சந்தரின் படங்களில் விபச்சாரிகளின் முடிவு மரணம் அல்லது ஓலைக்குடிசை என்று முடியும்! வெள்ளையர்கள் இல்லையெனில் நம் சமூகத்தில் இது போன்ற கருத்துக்களை முன்வைக்கக்கூட முடியாது என்று தோன்றுகிறது. வெள்ளையர்களின் வரவால் இந்தியா எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. பாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்கள், பெரியாரின் சுயமரியாதை, வங்காளத்தின் சமூக மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆங்கிலத்தாக்கமே காரணம். இப்படத்தை ஒருவரால் இரசித்து, மாற முடிந்தால் அது ஹாலிவுட்டின் சமூகப்பயன்பட்டைச் சுட்டும்!
விபசாரி என்பவள் யார்? நம்முள் ஒருவர்தானே! அவளை இந்த அவல நிலைக்குத் தள்ளுவது எது? சமூகக்காரணிகள்தானே! சமூகம் யார்? நாம்தானே! எனவே நாம் மாறும் போது சமூகம் மாறிவிடுவதில்லையா?
பெண் விடுதலை குறித்த உங்கள் வாக்குறுதியை கீழ்காணும் தளத்தில் பதிவு செய்யுங்கள்:
பெண் விடுதலை என்பது நம் விடுதலை.
மாற்றம் எப்போது நிகழும்?
பதிப்பு:
நா.கண்ணன்
Saturday, January 26, 2008
at
Saturday, January 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
thanks for the intro.
Post a Comment